ஞாயிறு, 3 ஜூன், 2012

பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]

முகப்பு » அனுபவம்சமூகம்பொது

பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]

March 21, 2012
 
அச்சிட அச்சிட 
பள்ளிக் கல்வி – முதல் பகுதி
தொடர்ச்சி…

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்காக ஒரு பரிசோதனை செய்தேன். முதல் தேர்வைக் காட்டிலும் எளிதாக மறுதேர்வு நடத்தினாலும் அதிலும் பெரும்பாலானோர் தோல்வியே அடைந்தனர். ஆகையால் வகுப்பறை போதனா முறை சற்று சுவாரஸ்யம் ஆக்கப்பட்டது. உற்சாகம் கூட்டப்பட்டது. தோல்வி அடைந்தாலும் என் வகுப்பு அந்த மாணவர்களுக்குப் பிடித்தே இருந்தது. எத்தனை முறையானாலும் புரியாத விஷயங்களைப் புரியவைத்தேன். 35 ஆண்டுகள் ஆசிரியப் பணியில், நான் தினமும் தூங்கியது 4 மணிநேரம் மட்டுமே. பகல்தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்ல மாணவர்கள் மேலும் வளர்ந்தனர். மோசமான மாணவர்கள் மேலும் மோசமான நிலைக்கே சென்றனர். செப்டம்பரில் தோல்வியடைந்தவர்கள் பிப்ரவரியிலும் தோல்வியையே சந்தித்தனர். இதை எவ்வாறு தடுப்பது? சிலர் மேசையருகில் சென்று பார்த்தால் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மரத்தில் தங்கள் பெயர்களைச் செதுக்கி இருந்தார்கள். அவர்கள் கவனம் பாடத்தில் இல்லை. கனவுலகில் சஞ்சாரம் செய்துகொண்டு இருந்தனர். சிலர் கண்ணைச் சுழற்றிக் கொண்டு இருந்தனர். தூக்கத்தை மீறி விழித்துக் கொண்டிருப்பதே ஒரு பெரிய இமாலயப் போராட்டமாக இருந்தது. முதல்நாள் இரவு முழுவதும் ஒருவன் தூங்கவில்லை. குருகுலத்தில் ஒரு பூஜையில் கலந்து கொண்டு இருந்துள்ளான். அவனை வகுப்பறையிலேயே ஓர் ஓரமாகப் படுக்க வைத்து தூங்கச் சொன்னேன். அடுத்த நாள் அவன் வகுப்பில் மிகக் கவனமாக இருந்தான். அதே போல தேர்வின் போது வெளியே வேடிக்கை பார்ப்பது சிலரது வழக்கம். பிறகு திடீரென்று அவசர அவசரமாக எழுத ஆரம்பிப்பார்கள்.

ஒருநாள் ஒரு மாணவருக்கு “மைட்டோகாண்டிரியா”வின் வேலைகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். அதன் முக்கியமான வேலை சுவாசித்தல். பத்து முறை தெளிவுப்படுத்தினேன். பத்து நிமிடம் கழித்துக் கேட்டான், “சார்! ‘சுவாசித்தல்’ அப்படின்னு ஒரு Answer வருகிறதே அதோட கேள்வி என்ன?” என்று! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆனால் பொறுமையாகச் சொன்னேன். சிலர் பாடம் நடத்தும்போது நிறைய புரிந்துகொள்வது போலத் தலையை நன்கு ஆட்டுவார்கள். அது நம்மைக் கவிழ்ப்பதற்காக என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடம் நடத்துவதைச் சற்று நிறுத்தி ஒரு சிறு வினாவைத் தொடுத்தால் அவன் திருதிருவென முழிப்பான். ஆகவே நீங்களே வகுப்பறை முழுவதையும் ஆக்கிரமிக்காமல் இடையிடையே மாணவர் பங்கேற்பு’ என்ற விஷயத்துக்கும் முக்கியத்துவம் தாருங்கள். விடை யாருக்குத் தெரியும் எனக் கேட்டுப்பாருங்கள். எல்லாக் கைகளும் உயர்ந்துவிடும். ஆனால் அதில் பலருக்கு விடைதெரியாது. கேள்வி கேட்கும் ஆசிரியர்கள் சரியான பதிலுக்காக மட்டுமே தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். சரியான பதில் கிடைத்து விட்டால் மிகத் திருப்தி அடைந்து விடுகிறார்கள். சில மாணவர்கள், தாம் பதிலளிக்கும் போது ஆசிரியரின் முக பாவனையை கவனித்து அதற்குத் தகுந்தாற்போல் பதில் கூறுவார்கள். ஓர் ஆசிரியர் Noun, Vetb, Adjective பற்றி நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றுக்கும் நேராக ஓர் உதாரணம் எழுதினார். அந்த உதாரணத்தைக் காட்டி, “இது என்ன சொல்?” எனக் கேட்பார். குழந்தைகள் அது Noun-க்கு நேரே இருப்பதால் பெயர்ச்சொல் என்பர். Verb-க்கு நேரே இருந்தால் வினைச்சொல் என்பர். ஆசிரியர் என்ன நினைக்கிறார்? கற்றல் மிக எளிமையாக உள்ளதாக நினைக்கிறார். ஆனால் இங்கு கற்றல் நிகழவே இல்லை என்பதை அவர் உணரவில்லை.
குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதைத் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு தினசரி வேலையாகத் தான் நினைக்கிறார்கள். கடமை உணர்வு மிக்க ஆசிரியர் குழந்தைகளை ஒரு மகத்தான பயணத்தில் உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வதாக நினைக்கிறார். ஆகவே சுவாரஸ்யமாகப் பாடங்களை நடத்த மெனக்கெடுகிறார். ஆனால் அவர் செய்யும் ஒரே தவறு இதுதான். தனக்குப் பாடங்கள் மீது இருக்கும் அதே ஆர்வம் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று தப்புக் கணக்குப் போடுவதுதான். நானும் இப்படி அடிபட்டிருக்கிறேன். பின் ஏன் குழந்தைகள் வகுப்புக்கு வருகிறார்கள்? அவர்கள் அங்கு வந்தாக வேண்டும். வேறுவழியில்லை. ஓர் உதாரணம்: உடம்பு சரியில்லாத குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுகிறோம். மருத்துவர் அன்பாக மருந்து கொடுத்து சாப்பிடச் சொல்லுவார். ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது? ‘இந்த மருந்து கசக்குமோ, குமட்டுமோ? இதை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிஞ்சுடலாம். இந்த ஆளு ஊசி கீசி போட்டுத் தொலைக்கப் போறாரு?’ என்றெல்லாம் நினைக்கும். விட்டால் ஓடியே போய்விடும். இதே போலத்தான் பள்ளியிலும் குழந்தை இருக்கிறது. மாலையில் பள்ளி கடைசி வகுப்பு முடிந்து மணி அடிக்கும்போது ஒரு சந்தோஷச் சத்தம் வருகிறதே, அதைக் கவனியுங்கள். விட்டது தொல்லை என்று ஓடுகிறார்கள்.
மாணவர்களைப் பொருத்த வரை பள்ளியில் அவர்களது வேலை ‘கற்றுக்கொள்ளுதல்’ அல்ல; மாறாக, கஷ்டப்படாமல் தினம் கொடுக்கப்படும் வேலையை முடித்துக் காட்டி, தன்மேல் பழி வராத அளவுக்கு நடந்துகொள்வது. அந்த வேலையை நியாயமாகச் செய்யமுடியவில்லையானால் குறுக்கு வழியிலும் முடித்து நல்லபெயர் வாங்குவது ஒன்றுதான் மாணவனது வேலை. தன்னிச்சையாக முயன்று சிந்திப்பவனுக்குப் பள்ளியில் மரியாதை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். எப்படியாவது விடையைச் சொல்லி ஆசிரியரிடம் சபாஷ் வாங்க வேண்டும். திட்டு வாங்காமல் தப்பிக்க வேண்டும். இதனால் சுயஅறிவை பயன்படுத்த வழியே இல்லாமல் போகிறது. குழந்தைகளைக் கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்த வேண்டும். கேள்விகள் கேட்க அவர்களுக்குப் பயம் வரக்கூடாது. அப்துல் கலாம், தான் செல்லுமிடங்களிலெல்லாம் இந்த வேலையை நன்றாகச் செய்கிறார். எங்கு போனாலும் குழந்தைகளைக் கேள்வி கேட்க வைக்கிறார்.
ஒருநாள் என் வகுப்பறையில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி மாணவர்களிடம் மனம்விட்டுப் பேச விரும்பினேன். “நான் கேள்வி கேட்கும் போது உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்? தயவுசெய்து பதில் சொல்லுங்கள்,” என்றேன். வகுப்பில் மயான அமைதி. ஒரு பையன், “சார்! முதலில் எச்சில் முழுங்குவோம்!” என்றான். “பாதி உயிர் போனது போல இருக்கும்” என்றான் ஒருவன். நல்ல பெயர் வாங்கிய பள்ளியிலேயே இப்படி ஒரு நிலை.

அதே போல கணித ஆசிரியர் ஒருவர் சொன்னார், “ஓரிரு கணக்குகள் கொடுத்தால் நன்றாக செய்கிறார்கள். மொத்தமாக 100 கணக்குகள் கொடுத்தால் திணறித் தடுமாறுகிறார்கள்,” என்றார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் வேலை கொடுத்த மாதிரியே மற்ற 4 பாடத்தின் ஆசிரியர்களும் அதே அளவு வேலை கொடுத்துள்ளார்கள். எழுத்து வேலை தேவைதான். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு லாரி எழுத்து வேலை கொடுத்தால் அவன் என்ன செய்வான் பாவம்! தேர்வு சமயத்தில் மிக அதிக அளவில் தவறுகள் செய்யும் பிள்ளைகள்தான் பெரும்பாலும் முதலில் விடைத்தாளை முடித்துக் கொடுக்கிறார்கள். கவலையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தப்பிக்கவே குழந்தைகள் நினைக்கிறார்கள்.
பிள்ளைகளை எவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தலாம், எவ்வளவு தூரம் மனஅழுத்தத்திற்கு உட்படுத்தலாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஓர் எல்லை தாண்டினால் நமக்கும் மாணவனுக்கும் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தம் அறிவைப் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். கனத்தை கழற்றி விட்டு விடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள். உங்கள் வகுப்பறை உற்சாகமாக இருக்க வேண்டும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருந்தால் அவர்களை, தாமும் சராசரிக் குழந்தைகளே என்று எண்ணச்செய்ய வேண்டும். அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடாதீர்கள்.
சில பிள்ளைகள் எந்த விதத்திலும் தயாராக இருக்கமாட்டார்கள். வேலைநேரத்தில் பென்சில் இல்லை, பேனா இல்லை, பேப்பர் இல்லை என்பார்கள். அவர்களது இடம் எப்போதும் குப்பையாக இருக்கம். நூலகத்தில் புத்தகம் எடுத்தால் தொலைத்துவிடுவார்கள். வீட்டுப்பாட நோட்டை வீட்டிலேயே பத்திரமாக வைத்துவிட்டு வருவார்கள். தம் நோட்டுகளை ஒழுங்காக வைத்துக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்களைத் தன் புத்திசாதுர்யத்தால் ஆசிரியர் சமாளித்தாக வேண்டும்.
ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் பாடங்களின் மூலம் அவர்கள் எந்த உருப்படியான விஷயத்தையும் கற்றுக் கொள்வதில்லை. இன்றைய தேர்வில் எழுதிய பாடங்களை 2 மாதம் கழித்து மறந்து விடுகின்றனர். எல்லாம் பயனற்ற செய்கைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் நினைத்தாலே மனதுக்குச் சங்கடமாக உள்ளது. மூளையின் செயல்திறன் மந்தமாகும் வகையில் மாணவர்களுக்கு நாம் அளிக்கும் கல்வி இருக்குமேயானால் அவர்களது மூளையை நாம் மேலும் மழுங்கவைத்துக் கொண்டிருப்பதாகப் பொருள். ஆகவே Activity Based Learning-ஐ அமுல்படுத்துங்கள். கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளிடம் சொல்லுங்கள், எந்த விஷயத்தைச் செய்தாலும் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு செய்யுங்கள் என்று. நாம் பயன்படுத்தும் மொழிப்பிரயோகமும் குழந்தைகளுக்குப் புரிந்துகொள்ளும் படியாக இருக்க வேண்டும்.
வகுப்பறையில் மாணவர்களிடம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்கச் சொல்லி, ஆனால் எந்த அவசரமும் இல்லை; பதட்டப்படாமல் மெதுவாகக் கண்டுபிடித்தால் போதும் எனக் கூறிப்பாருங்கள். அசத்திவிடுவார்கள். ஒருமுறை செய்முறை வகுப்பில் இதுபோல ஒரு சோதனை செய்வதைக் கொடுத்து, நீங்கள் சோதனை செய்வது முக்கியமல்ல. நீங்கள் எந்த முறையில் அதை அணுகப் போகிறீர்கள் என்பதே முக்கியம் என்றேன். பலர் பலவிதமான அணுகுமுறைகளைக் காட்டினார்கள். நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு Creative Thinking இடம் பெற்றிருந்தது. இதேபோலத் தொடர்ந்து நான் செயல்படமுடியவில்லை. நான் பாடத்திட்டத்தை முடிக்கவில்லை என தலைமையாசிரியர் வருத்தப்பட்டார். நானும் வேறு வழியில்லாமால் பழைய உருப்படாத போதனை முறைக்கு மாறிவிட்டேன்.
பல ஆசிரியர்கள் நிஜ அறிவுக்கும் அறிவு போன்ற தோற்றத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதில்லை. பலமுறை பயிற்சி செய்த பின்னரும் மாணவர் தவறு செய்தால் அவன் முட்டாள் என்றும் அவனுக்கு படிப்பில் நாட்டமில்லை என்றும் முடிவுகட்டி விடுகின்றனர். ஓர் ஆசிரியர் இன்னும் ஒடிபடி மேலே போய் மாணவனுக்கு மனநிலை குறைபாடு இருக்கக் கூடும் என்று முடிவு கட்டுகிறார். அந்த மாணவருக்கு அடிப்படை விஷயங்களில் தெளிவு இல்லை என்பதை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. அடித்தளத்தை மாற்றியமைப்பதுதான் நமது முதல் வேலை. கொஞ்ச விஷயங்களைப் பற்றி மட்டுமே படித்தாலும் அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வது சிறந்தது. மிக அதிகளவில் படித்து சாதித்து விட்டது போல காட்டிக்கொண்டு விஷய ஞானம் பூஜ்ஜியமாக இருந்தால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை. எனக்கு சோமசுந்தரம் என ஒரு தலைமையாசிரியர் இருந்தார். Prose-ல் 10 பாடமும் Poetry-ல் 10 Poem-மும் இருந்தது. (9ம் வகுப்புக்கு). அவர் என்னை அழைத்து 6 பாடம் 6 Poem நடத்தினால் போதும் அதை Perfect ஆகச் செய்யுங்கள் என்பார். புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? ஒரு விஷயம் நமக்குப் புரிந்தது என்றால் என்ன பொருள்? அந்த விஷயத்தை நம் சொந்த வார்த்தைகளால் விவரிக்க தெரியவேண்டும். அதைப்பற்றிய உதாரணங்கள் கொடுக்கத் தெரிய வேண்டும். அவ்விஷய ஞானத்தை பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தத் தெரியவேண்டும். இதுபோல குழந்தைகளைப் பழக்க வேண்டும். பல்வேறு விஷயங்களை நினைவு வைத்துக்கொள்வது அறிவோ, கல்வியோ ஆகாது. அந்த விஷங்களை சூழ்நிலைக்கேற்பப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். அதுதான் உண்மைக்கல்வி. அதுதான் உண்மையான அறிவு. சென்னை மாநகரின் சாலைகளின் பெயரையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு பூந்தமல்லி சாலையிலிருந்து ஹாரிங்டன் சாலைக்கு போகத் தெரியவில்லையெனில் என்ன பயன்? பள்ளிகளில் மாணவர்கள் விஷயங்களையும் விபரங்களையும் மட்டுமே சேகரித்து வைக்கின்றனர். தேர்வின் போது அதை நன்றாகவே வாந்தி எடுக்கின்றனர். இந்த விபரங்களையும் விஷயங்களையும் ஜீரணித்துக் கொள்வதில்லை. ஒரு பச்சைக்கிளிக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்தால் என்ன நிலையோ அதே நிலையில்தான் மாணவர்களும் இருக்கின்றனர்.
மாணவர்கள் கட்டுரைகள் எழுதும் போது ஆசிரியர் கூறுகிறார், ஒரு பக்கத்துக்கு மூன்றுக்கு மேற்பட்ட தவறுகள் இருந்தால் அந்தப் பக்கத்தை மறுபடியும் எழுதித்தர வேண்டும். அடிப்படை நோக்கம் என்ன? மாணவர்கள் தெளிவாகவும் திருத்தமாகவும் எழுத வேண்டும் என்பதுதான். இந்த இடத்தை அடையும் எண்ணத்துடன் பயணத்தைத் தொடரும் மாணவன் வழியில் உள்ளதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு, சென்றடைய வேண்டிய இடத்தை மறந்தே விடுகிறான். ஆகவே குறிக்கோளை மறந்து விடக்கூடாது. உண்மையில் பள்ளிகள், தங்கள் நிர்வாக வசதிக்காகவும், தம் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும் நடத்தும் செயல்களுக்கு நியாயச் சாயம் பூசக்கூடாது.

தேர்வு எழுதுவது, பாஸ்மார்க் வாங்குவது எல்லாமே ஒரு போலியான விஷயம். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளிகள் எல்லோரும் கூட்டணியாகச் சேர்ந்து கொண்டு நடத்தும் ஒரு மிகப் பெரிய நாடகம்தான் தேர்வு. குழந்தைகளுக்குத் தெரியாதவற்றையும் தெரியும் என நம்ப வைக்கும் ஏமாற்று வேலை. ஒவ்வொரு தேர்வுக்கும் நாம் ஏன் முன்னறிவிப்பு வெளியிடுகிறோம்? எந்தக் கேள்விகள் வரலாம் என்று ஏன் முன்கூட்டியே அனுமானிக்கிறோம்? 10 வருட வினாத்தாள்களில் ஏன் பயிற்சி கொடுக்கிறோம்? இப்படிச் செய்யாவிட்டால் முக்கால்வாசி மாணவர்கள் தேர்வில் தோல்வியைத் தழுவுவார்கள். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது பற்றி யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பகிரங்கமான ரகசியம்.
ஆசிரியர்கள் பலர் நல்ல நடத்தையை நல்ல பண்பு என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். அமைதியாக இருப்பது நல்ல குணம் என்று எண்ணுகிறார்கள். சொன்னதைச் செய்ய வேண்டும் என்பதே குழந்தைகளிடம் அவர்கள் எதிர்பார்க்கும் குணம். ஆனால் இதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் உணருவதில்லை. மற்றவர்கள் விரும்பும் விதத்தில் பேசுவது, நடந்து கொள்வது என்பதை விட வெறுக்கத்தக்கது எதுவுமில்லை என்று குழந்தைகள் நினைக்கின்றன. ஆகவே கல்வி மூலம் குழந்தைகளின் உள்ளார்ந்த நற்பண்புகளை வெளிக் கொணரவேண்டும். “Education is the manifestation of perfection already in man” என்பார் விவேகானந்தர். ஆனால் இந்தத் தேர்வுக் கிறுக்குப் பிடித்து அலையும்வரை இது சாத்தியம் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சிந்தனையாளர்களை ஊக்குவிப்பது பற்றி பேசுகின்றன. ஆனால் சிந்தனையாளர்கள் உருவானார்களா? உருவாகியிருந்தாலும் பாரதத் திருநாட்டில் தங்கினார்களா?
LKG-லிருந்து கல்லூரி வரை ஆசிரியர்களாகிய நாம் என்ன செய்தோம்? நம் மாணவர்களை, உண்மையில் அவர்களுக்கு உள்ள அறிவைக் காட்டிலும் அதிக அறிவுள்ளவர்கள் போலக் காட்டிக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். சக ஆசிரியர்கள் மத்தியில் நம் மதிப்பை உயர்த்திக் கொள்ள, மற்ற பள்ளிகளின் முன்னால் நம் பெருமையை பீத்திக் கொள்ள நாம் பின்பற்றும் முறை இதுதான். மாணவர்களுக்கு உண்மையில் என்ன தெரியும்? தெரிந்ததை அவர்கள் எவ்வளவு தூரம் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையேயில்லை. மாணவர்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்று பிறரை போலியாக நம்பவைப்பதே நம் வேலையாக உள்ளது. இந்தப் பாடம், பாடத்திட்டம் (Syllabus) இதெல்லாம் வெறும் வீண். நமது பாடத்திட்டத்தின்படி நன்றாக நாம் பாடம் நடத்தி விடலாம். அதில் மாணவர்களும் தேர்வு எழுதி பாஸாகிவிடலாம். ஆனால் அவனுக்குக் கடைசியில் என்ன விஷய ஞானம் மிச்சமிருக்கும் என்ற கேள்விக்குப் பதில் என்னவோ வெட்கக் கேடுதான்! முதன்முதலில் தேர்வுகள் என்பது நியாயமான முறையில் மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விஷயம் என்றுதான் எண்ணினேன். ஆனால் கொஞ்ச காலத்திலேயே எனக்கு சில உண்மைகள் புரிந்தன. முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் திடீர் தேர்வுகளில் பெரும்பான்மையானவர்கள் தோல்வியடைந்தனர். இது ஓர் ஆசிரியன் என்ற முறையில் எனக்குக் கெட்டபெயர். பள்ளியின் மானம் காப்பாற்றப்பட வேண்டுமானால் மாணவர்களுக்கு அவகாசம் அதிகம் கொடுக்க வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும். Repeated questions-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் இப்போது எல்லாரும் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இது அருமையான பித்தலாட்டம். இதை எப்படி மாற்றுவது? பூனைக்கு யார் மணியைக் கட்டுவது? ஆசிரியர்களுக்கு வேண்டியது புத்திசாலியாக இருக்கும் தோற்றமே! உண்மைக்கல்வி அவர்களது குறிக்கோள் அல்ல. உண்மையான புரிந்து கொள்ளுதல் தேவையில்லை என்ற ஒரு சூழல் உருவாகிவிட்டது. சிந்தனையாளர்களின் ஆவலும், துடிப்பான கேள்விகளும் ஆசிரியர்களுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கும். ஏனென்றால் அவர்களிடம் அதற்கு விடை இல்லை. குழந்தைகள் தேர்வில் குறைவான மார்க் வாங்கினால் பெற்றோர்களுக்கு வரும் கோபம் சொல்லிமுடிவதில்லை. வேறு பள்ளியில் சேர்க்கவும் இந்த மதிப்பெண்தான் தேவைப்படுகிறது. என்னுடைய உடல் அடிமைப்பட்டுக் கிடந்ததே தவிர என் மனமும் அறிவும், உணர்வுகளும் அடிமைப்பட்டு விடவில்லை. நான் மறைமுகமாக என் சிந்தனைகளை மாணவர்களுக்கு ஊட்டி வந்தேன். இருந்தாலும் நான் 10 சதவீத வெற்றிதான் பெற்றேன்.
மாணவர்கள் சிறைச்சாலையில் இருந்ததாகவே நான் நினைத்தேன். அவர்களைக் கைதிகளாகத்தான் பார்த்தேன். ஏவலாட்கள் வேலையைத் தான் மாணவர்கள் செய்தார்கள். அவர்கள் மூளை வகுப்பில் இல்லை. பள்ளி என்பது முட்டாள்களைப் பழக்கும் இடமாகவே எனக்குத் தெரிந்தது. இது ஒரு கசப்பான உண்மை. பள்ளியில் நுழையும் போது குழந்தைகள் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். சில வருடங்களில் அந்த ஆர்வம் செத்து விடுகிறது. பெரியவர்கள் ஒரு மணிநேரம் கூட செய்ய முடியாத வேலைகளை நாள் பூராவும் செய்யும்படி குழந்தைகள் திணிக்கப்படுகிறார்கள். தாகூர் போன்றவர்கள் இதைக் களைய சாந்தி நிகேதன்களை அமைத்தனர். நாளடைவில் அவைகளும் பழைய குருடி கதவைத் திற கதைதான். நவோதயா வித்யாலயாக்களும் ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களைத் தியாகம் செய்து விட்டன. CBSE, ICSE, World School, International School என்று பெயர்களும் மாறலாம். ஆனால் அடிப்படை, அடிமைத்தனம்தான். சுய சிந்தனைக்கு மதிப்பில்லை. அவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டும். அதனால்தான் படித்தவுடன் வெளிநாட்டுக்கு ஓடுகிறான்.
மாணவரின் கவனத்தை பாடத்தின் மீது கொண்டுவரச் செய்வது ஆசிரியரின் கடமை. அதற்குச் சுவையான சூழலை உருவாக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டும் பொருள்கள் பயன்படுத்தப்படவேண்டும். பாடம் சுவையாக இல்லையென்றால் குழந்தை வேறு சுவையான இடத்துக்கு தாவத்தான் செய்யும். குழந்தைகளின் சுற்றுச்சூழல், கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஈடுபாட்டை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். பள்ளி ஒரு சந்தோஷமான இடமாக இருக்க வேண்டும். அறிவார்த்தமான அணுகுமுறை வேண்டும். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும். இன்றைய நிலையே நீடித்தால் குழந்தைகள் அறிவைத் துறந்து, உணர்வைத் துறந்து வெறும் மரப்பாச்சி பொம்மைகளாகத்தான் உருவாவார்கள்.
சிலவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் குழந்தை அவற்றை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கும். அவற்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தவுடன் அப்படியே ஆர்வத்துடன் பற்றிக் கொண்டு பயன்படுத்துகிறது. ஆனால் மற்றவர்களை திருப்திப்படுத்தவேண்டி ஒன்றைக் கற்கும் குழந்தை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் நீங்கிய உடனேயே அதனை மறந்து விடுகிறது. இதன் காரணமாகவே குழந்தைகள் தாம் கற்ற விஷயங்களை மறந்து விடுகின்றன.

பள்ளிக் கல்வி என்பது முழுமையானதல்ல. குழந்தை சொற்களைக் கற்று ஆசிரியர் கேட்கும் போது அவற்றை வாந்தி எடுத்து- இப்படிக் கற்றல் நிகழும் போது மாணவப்பருவமே வீணடிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வியே தேவையற்றது என்று நான் கூறவில்லை. வாந்தியெடுக்கும் முறை கூடாது என்கிறேன். ஒரு குழந்தை தனது ஆர்வத்தின் அடிப்படையில் இயற்கையாகக் கற்கும்போது, பயமோ, தயக்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் தனக்குத் தேவையில்லாததைக் கற்காமல் விலக்கும் போது அது கற்பதில் விருப்பமும் இன்பமும் கண்டு மேலும் நல்ல அறிவு வளர்ச்சி அடைகிறது. இத்தகைய மாணவ மாணவியரே சமுதாயத்திற்குத் தேவை. இத்தகைய பண்புள்ள ஒரு மாணவன் தன் வாழ்நாள் முழுவதும் தனது ஒவ்வொரு அனுபவத்திலும் கற்றுக் கொண்டே இருப்பான். பள்ளியில் மாணவர்கள் இதைத்தான் கற்கவேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கும்வரை நல்ல கல்வியளிக்க முடியாது : நல்ல மாணவர்களை உருவாக்க முடியாது. அவர்களது விருப்பங்களை ஒழுங்குபடுத்தி, அவர்கள் அவற்றைக் கற்க உதவி புரிவதாகப் பள்ளி இருக்க வேண்டும். தான் என்ன கற்க வேண்டும், எதனைக் கற்க வேண்டாம் என்பதை மாணவனே தீர்மானிக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் இது சாத்தியமே, இது சாத்தியமே! மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி தேவையானதைக் கற்க பள்ளிகளில் வசதி இருக்க வேண்டும். இனியாவது குழந்தைகளை நம் வழியில் கட்டாயப்படுத்தி வீணடிக்காமல், அவர்களது ஆர்வத்தை வளர்க்கும் கல்விக் கூடங்களை உருவாக்குவோம். ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்பதை ஆசிரியன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். ஒரு முயற்சி செய்யலாமே என்பதே என் அவா!
வணக்கம்.

பள்ளிக்கல்வி – 1


முகப்பு » அனுபவம்சமூகம்பொது

பள்ளிக்கல்வி – 1

March 5, 2012
 
அச்சிட அச்சிட
இடைநிலைக்கல்வி போதிப்பவனாக சுமார் 35 ஆண்டுகள் இருந்ததால் பல உண்மைகளை உணர நேர்ந்தது. யதார்த்தமான சூழ்நிலைகளையும், அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் விஷயத்தில் புத்திசாலித்தனம், புத்திகூர்மை, அறிவுத்திறன் என்ற பதங்களை நாம்  குறிப்பிடுகிறோம்.  தேர்வுகளில்  நல்ல  மதிப்பெண்களை  பெறுவதையோ அல்லது  பள்ளியிலோ  கல்லூரியிலோ  சிறந்து விளங்குவதையோ  மட்டும்  இவ்வார்த்தைகள் குறிப்பிடமாட்டா. ஒருவன் வாழ்க்கையை  வாழும்  விதம்,  பல்வேறு மாறுபட்ட சந்தர்ப்பங்களில்,  புதிய சூழ்நிலைகளில், மிகக்குழப்பமான  நேரங்களில் அவன் நடந்து கொள்ளும் விதத்தையே  புத்திகூர்மை என்போம். நாம் எவ்வளவு  விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல; தெரியாத ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே தம்மை புத்தி கூர்மையுடையவர் என ஒத்துக்கொள்ளலாம்.
புத்திசாலிக் குழந்தை வாழ்க்கையைப் பற்றியும் அதன் மகத்துவங்கள் பற்றியும் அறிவதில் ஆர்வம் காட்டுகிறது. புத்திசாலிக் குழந்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையில்  எந்தவித  தடையும் இருப்பதில்லை. மந்தமான குழந்தை ஆர்வம் மிகக் குறைந்தும், சுற்றி நடப்பவைகளில் ஆர்வமின்றி அலட்சியமாகவும், தானாகவே கற்பனை செய்து கொண்ட உலகத்தில் வாழவும் விரும்புகிறது.  புத்திசாலி  குழந்தை  ஒரு  செயலை  ஒரு  வழியில்  செய்ய முடியாவிடின்  மாற்றுவழியை  பயன்படுத்தி  செய்ய முயல்கிறது.  தோல்விகளை  சகித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தன் பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை முயற்சி மேற்கொள்கிறது. மந்தமான குழந்தை  புதிய வழிமுறைகளை  பற்றிச் சிந்திக்கவே பயப்படும்.
புத்திசாலிக் குழந்தை  சோதித்துப் பார்க்க விரும்புகிறது. எந்த ஒரு புதிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன என்னும் விதியை உணர்ந்து வாழ்கிறது. ஒரு செயலை ஒரு வழியில் செய்ய முடியா விட்டால் புத்திசாலிக் குழந்தை மற்றொரு வழியைத்  தேர்ந்தெடுத்து முயற்சி செய்கிறது. மந்தமான குழந்தை புதியமுறைகளைப் பற்றி சிந்திக்கவே பயப்படுகிறது ; மற்றவர்கள் தூண்டினாலும் முயற்சிப்பதில்லை. தானே செயல்படும் சூழ்நிலையையே புத்திசாலிக் குழந்தை விரும்புகிறது. மற்றவர்கள் உதவி செய்து கற்கும் நிலையை விரும்புவதில்லை. ஆனால் மந்தமான குழந்தை யாராவது சொல்லிக் கொடுத்து விடையை கண்டுபிடிக்க உதவி செய்வார்களா? என எதிர்பார்க்கிறது.
பல இடங்களில் இந்த 2வது நிலைக் குழந்தைகளையே அதிகம் கவனிக்கிறார்கள். சிந்தனையாளர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.  மந்த  நிலையில் உள்ளவனை  மட்டும் கடைத்தேற்றுங்கள். நமக்குத்  தேவை  100%  தேர்ச்சி  என்று  என் பள்ளியின் தலைமையாசிரியர் என்னிடம் அடிக்கடி கூறுவார். புத்திசாலிப்பையன்  தனக்குப்  புரியாத  புத்தகத்தைப்  படிக்க ஆர்வத்துடன்  முயல்வான்.  அவனது எண்ணம் சிறிது படிக்க ஆரம்பித்தால் புரிய ஆரம்பித்துவிடும் என்பதே. மாறாக மந்தமான மாணவன் நழுவி விட முயல்வான். ஒரு குழந்தை தன் 3 வயதுக்குள் கற்றுக் கொள்ளும் அளவு மிகவும் அதிகமானது. வயது முதிர்ந்த மற்ற பருவங்களில் ஒருவன் இந்த அளவு கற்பது என்பது மிக அரிதான ஒன்று. நமது கற்றுக் கொள்ளும் திறன் நமக்கு வயதாக ஆக குறைந்து விடுகிறது? ஏன்? *

பெரியவர்களாகிய நாம் தான் குழந்தைகளின் புத்திசாலித்தனம் மற்றும் சுயமுன்னேற்றத்திறனை பெரும்பாலும் அழித்துவிடுகிறோம்.  ஆசிரியரை  திருப்திப்படுத்தப்  பழக்குகிறோம். பெற்றோரை  குஷிப்படுத்த  பழக்குகிறோம்.  புதியவைகளை சிந்திக்க அனுமதிப்பதில்லை. கடினமான விஷயங்களில் ஈடுபடவே விடாமல் பயமுறுத்தி வைத்துள்ளோம். நல்ல குழந்தை என்றால் நாம் விரும்புவதை செய்யும் குழந்தையாக இருக்க  வேண்டும் என விரும்புகிறோம். சிறிய வயதிலேயே நட்சத்திரம் அளிப்பது, நூற்றுக்கு நூறு என்றால் சபாஷ் போடுவது, பள்ளியின் ரிப்போர்ட் கார்டில் 0 என்ற (Out Standing) குறிப்பு – ஆசிரியரின் மற்றும்  தலையாசிரியரின் அட்டவணையில்  நம் குழந்தை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதல்  மார்க் வாங்க  வேண்டும் – படிப்பதின்  நோக்கமே  Best Marks என்னும்  எண்ணத்தை  வளர்த்து விடுகிறோம்.  ஆக  குழந்தைகளின்  விருப்பங்களும், திறமைகளும் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையைப் போல சுட்டுப் பொசுக்கப்படுகின்றன. இது போன்ற மனப்பாடச் சூழலில் வாழும் குழந்தை 10 வயதாவதற்குள் கேள்வி கேட்பது என்பதையே மறந்து விடுகிறது. அதுமட்டுமல்ல. ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேட்பவர்களையும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறது.
குழந்தைகள்  அவர்களது  சொந்தமான  அறிவை  பயன்படுத்த  நாம்  விடுவதில்லை. அவர்களது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த விடாமல் test, test test எழுவதையே வாழ்க்கையின் லட்சியமாக்கி விடுகிறோம். இந்த method ல் தான் குழந்தைகள் வாழ்க்கையில் பிரகாசம் அடைவார்கள் என்று குழந்தைகளை Brain Wash செய்து விடுகிறோம்.
ஆசிரியர்  என்ன  செய்வார்,  தனக்கு முன் மலைபோல குவிந்துள்ள  பேப்பர்களை திருத்தி மதிப்பெண் வழங்க  வேண்டும். இது ஒன்றை  மட்டும்  செய்வதே  தன்  ஜென்ம  சாபல்யமாக  அவர்  நினைக்கிறார். அதிகம்  கேள்வி  கேட்கும்  மாணவர்களை  அவர் விரும்புவதில்லை. ஒரு மாணவனை பொறுத்தவரை பள்ளி என்பது தினசரி ஆசிரியர்கள் கூறும் வேலைகளை செய்து முடிக்கும் இடம் என்று ஆகிவிட்டது. ஒரு பையன் (அ) பெண் தாம் சிந்திப்பதை விட்டு விட்டு, அவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அதைத் திணிக்கிறோம். குழந்தைகளிடம் உண்மைகளை உள்ளபடி கூறுவதில்லை. நாம் நினைக்கும் விதத்தில் உண்மைக்குப்  புறம்பாகத்  தான் கூறுகிறோம்.  ஏதோ  நாம்  கடவுளைப்  போன்றும்,  அனைத்தையும் அறிந்தவர்களைப் போன்றும் சர்வ வல்லமைகளை உடையவர்களைப் போன்றும் எப்போதும் நியாயமே வடிவெடுத்த நீதி தேவதை போலவும் குழந்தைகளிடம் நம்மைக் காட்டிக் கொள்கிறோம். தனக்குத் தெரியாத விஷயத்தை மாணவர்களிடம் எனக்குத் தெரியாது என்று ஆசிரியர்கள் சொல்வதில்லை. அப்படி ஒப்புக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. சொன்னால்தானே குழந்தைகள் பெரியவர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்?

திறந்த மனத்துடன் குழந்தைகளிடம்  பேசவேண்டும்;  நடந்து  கொள்ள  வேண்டும்.  ஆசிரியர் தன்னிடம்  ஒப்படைக்கப்பட்ட  அனைத்துக் குழந்தைகளிடமும் சமமாக அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். எந்த கல்வி நிறுவனமாவது “சட்டம் நீங்கள் பள்ளிக்கு சென்றாக வேண்டும் என்கிறது. ஆனால் அந்த சட்டம் நீங்கள் பள்ளியையும் ஆசிரியரையும் விரும்பித்தான் ஆக வேண்டும் எனக்கூறவில்லை. “இப்படிக் கூறினால் பல குழந்தைகள் சந்தோஷமாக பள்ளிக்கு வருவார்கள். பள்ளிக்  குழந்தைகள்  தாங்கள்  நினைப்பதையும்,  உணர்வதையும்,  தம் ஆர்வங்களையும், கவலைகளையும் வெளிப்படையாகப்  பேசக்கூடாது  என்பதை ஆரம்ப  கட்டத்திலேயே உணர்ந்து கொண்டு விடுகிறார்கள். தங்கள் எண்ணங்களைப்  பற்றிப்  பேசக்கூடிய ஒருவரை அவர்கள் மிக அரிதாகவே வகுப்பறையில்  சந்திக்கிறார்கள். சில பெற்றோர் மனநல மருத்துவரிடம் பிரச்சினைக்குரிய தம் குழந்தைகளை அனுப்புகிறார்கள். அங்கு அது தன் மனம் விட்டுப் பேசுகிறது.  இந்த  உரிமையை  வீட்டிலேயே  (அ)  வகுப்பறையிலேயே  கொடுத்து விடலாமே!
குழந்தைக்குத்  தேவையான அவசியமான அறிவை கொடுப்பதற்கு பதிலாக நம் விருப்பங்களைத் திணிக்கிறோம். அவர்கள் விரும்புகிறார்களா? அல்லது பயமுறுத்தப்படுகிறார்களா?  என்பது  பற்றி நமக்குக் கவலையில்லை. Harmoniuos Development of Hand Head and Heart என்று ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரியில் படிப்பதோடு சரி! வகுப்பறை என வரும்போது ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாமல் போய்விடுகிறது.
பள்ளி நடைமுறைகள் குழந்தைகளின் இயல்பான கற்கும் திறனுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்று சொன்னால் எல்லோரும் என்னை அடிக்க வந்து விடுவார்கள். ஆனால் அது தான் உண்மை. இந்த நடைமுறைகளை மாற்றி குழந்தையின் இயல்புக்  கேற்ற  கல்வியை  தர  எந்த ஆசிரியரேனும் முயல்வாராயின் அது  தனியார் நிறுவனமாக இருந்தால் அவர் விலக்கப்பட்டு விடுவார். அரசு நிறுவனமாக இருந்தால் சட்டத்தில் இடம் இல்லை என அமுக்கப்பட்டு விடுவார். மாற்ற முயன்றவர்கள் மாற்றப்பட்டார்கள். மாணவர்கள் ஒரு விஷயத்தைப்  புரிந்து முயற்சி செய்து உள்வாங்கி விட்டால் பின்னர் அதை வேண்டாம்  என்று  தூக்கி  எறிய  மாட்டார்கள்.  மாணவர்கள்  புரிந்து கொள்வதில்லை  ;  அதை  விரும்புவதும்  இல்லை  ; கவனிப்பதும்  இல்லை  என்று  ஆசிரியர்களின்  வழக்கமான  குற்றச்சாட்டு அர்த்தமற்றது.  மாணவர்கள்  விடைகளைத் தேடுவோர் எனவும், சிந்தனையாளர் எனவும் 2 வகைப்படுவர். சிந்தனையாளர்கள் வழக்கமான வகுப்பறையிலிருந்து சற்று மாறுபட்டே காணப்படுவார்கள். விடைகளைத் தேடும் மாணவர் குழாம் தங்கள் முயற்சியில் வெற்றி அடைய வில்லையானால் தோல்வி  மனப்பான்மையில்  துவண்டு  விடுவார்கள்.  நம்பிக்கை  இழந்து விடுவார்கள்.  மாறாக  சிந்தனையாளர்  குழாம் தொடர்ந்து முயற்சிகள் செய்ய தயாராக இருப்பார்கள். பள்ளிப்படிப்பு இவர்களுக்குப் போதாது எனக் கருதிய நான் 5 பேரை 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே மதுரைப் பல்கலைக்கழக Micro Biology Dept க்கு அழைத்துச் சென்றது எனக்குப் பெரிய வெற்றியாக  இருந்தது.  அந்த  5  பேரில்  3  பேர்  தற்போது  நல்ல நிலையில்  இருக்கிறார்கள்.
என்னுடைய  வகுப்பறை வழக்கமான வகுப்பறையிலிருந்து மாறுபட்டே காணப்படும். அந்தக் காலத்தில் tape recorder ஒன்றுதான் Audio Aid. 6 மாணவர்களும் நானும் வினா விடை கேட்கும் விதமான ஓர் உரையாடலாக ஒரு கேஸட்டில் ல் பதிவு செய்து வகுப்பறையில் போட்டுக் காட்டினோம். அதனுடைய விளைவு அபரிமித‌மாக இருந்தது. கடைத்தரத்தில் இருந்த அன்பர் கூட ரசித்துக்கேட்டார்.
.
பாலங்களைப் பற்றிய ஒரு பாடம் இருந்தது. அருகில் அப்போதுதான் காவிரியில் குறுக்கே முக்கொம்பு என்ற சிறு அணை கட்டி வந்தார்கள். நேராக அங்கு அழைத்துச் சென்று காட்டினேன். அங்கிருந்த சிவில் இன்ஜினியர்கள் இவர்களுக்கு பாலங்கள் பற்றி விளக்கிச் சொன்னதில் மாணவர்களுக்கு மிக சந்தோஷம். இதேபோலத்தான் எத்தில் ஆல்கஹால், அசிட்டிக் அமிலம் தயாரித்தல் என்ற பாடம் நடத்தவில்லை. பதிலாக திருச்சியில் உள்ள Trichy Distilleries and Chemicalsதொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றது மிகப் பயனுள்ளதாக இருந்தது. பள்ளியில் Photographic Club, Transistor Radio Club, Volve Radio Club, Drawing Club அனைத்தும் செயல்பட்டன. குருகுல மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதில்லை என்றாலும் என் செயல்பாடுகளைக் கவனித்த சுவாமி சித்பவானந்தர் எனக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.
ஒரு மாணவனுக்கு அறிவியல் பாடத்தில்  33  தலைப்புகளில்  பாடங்கள்  இருக்கிறது  என  வைத்துக் கொள்வோம்.  ஒவ்வொரு  சனிக்கிழமை  மாலையும் மாணவர்கள்  மிகவும் free யாக  relaxed ஆக  இருப்பார்கள்.  அந்த நேரங்களில்  திருச்சி, தஞ்சை,  புதுக்கோட்டை மாவட்டங்களில்  கல்லூரிகளில்  பணிபுரியும்  பேராசிரியர்களை  வாரத்திற்கு ஒருவராக  பள்ளிக்கு  அழைத்துவருவேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். Audio Visual aids கொண்டு வந்து காட்டுவார்கள். ராமாயண  தொடர்  சொற்பொழிவுகள்,  மகாபாரத  தொடர் சொற்பொழிவுகள்  போல  குருகுலத்தில்  விஞ்ஞான தொடர்  சொற்பொழிவுகள்  70களிலும்  80களிலும்  நிகழ்ந்தன.  அந்தக் காலகட்டத்தில்  தமிழகத்தின்  எந்தப்  பள்ளியிலும் மாணவர்கள் பரிசோதனைகளைத் தாமே செய்து பார்த்ததில்லை. ஆசியரியர்களும் செய்து காட்டி பொழுதை வீணாக்காமல் மனப்பாடம் செய்யக்கூறிவிடுவார்கள். Learning by doing என்று ஒரு திட்டம் வகுத்து 7ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தாங்களாகவே தங்கள் பாடப்பகுதியில் வரும் ஆய்வுகளை செய்து கற்றார்கள். ஆய்வகம் ஒய்வகமாக இல்லாமல் போர்க்களம் போல் Activ ஆக இருந்தது. எனக்குப் பின்னால் வந்தவர்கள் இதைக் கடைப்பிடித்தார்களா என்பதை நாம் அலச வேண்டாம்.  ஆசிரியப்  பணி  அறப்பணி;  அதற்கு  உன்னை  அர்ப்பணி  என்று ஒரு  வாசகம்.  அதை  நான்  உள்வாங்கிக் கொண்டேன். முழுக்க முழுக்க என்னை அப்பணிக்கு அர்ப்பணித்தேன்.

ஒருமுறை எங்கள் கோசாலையில் லட்சுமி என்ற மாடு இறந்து விட்டது. அதைப் புதைத்து வைத்து சிறிது காலம் கழித்து தோண்டி எடுத்து அதன் எலும்புகளை கம்பி கொண்டு சேர்த்து நிற்க வைத்து மாவட்ட கல்வி அலுவலர்க்கு காட்டினோம். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு இந்த காரியத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 8 பேருக்கு தன் பாராட்டுகளைத் தெரிவித்தார். இவ்வாறு ஆரம்பித்து நீர்வாழ்வன,  நீர்நில  வாழ்வன, ஊர்வன,  பறப்பன, பாலூட்டி  என அனைத்து  இன  எலும்புக்கூடுகளும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டன. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா போன  போது கடல்வாழ் உயிரினங்களை  பல மாணவர்கள்  சேகரித்தார்கள்.  நாம்  லேசாக ஊக்கம்  கொடுத்தால்  போதும்  அவர்களை இயல்பான  நிலையில்  வைக்கலாம்.  செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். பிறக்கும்  போதே ஞானியாகப் பிறக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம்  பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். சிந்தனையாளர்கள் உருவாக்கப்பட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. வகுப்பறையில் உள்ள மாணவன் வெளிச்சூழ்நிலையில் அபரிமிதமான ஆற்றல்களை வெளிப்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அந்தத் திறமை வகுப்பறையில் முடக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஒரு புத்திசாலிப் பையனோ பெண்ணோ வகுப்புக்குள் வந்தவுடன் முட்டாளாக மாறுவது ஏன்? அதற்கு காரணம் யார்?
நாம் தான்.
தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்காக ஓர் பரிசோதனை செய்தேன்! அது பற்றி அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்!
(தொடரும்…)


வெள்ளி, 1 ஜூன், 2012

பள்ளிகள் திறப்பு: இலவசப் பாடப் புத்தகங்கள் விநியோகம்

 
ஜூன் 1: கோடை விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்புகள் தொடங்கிய முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன
.பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு மே 1-ம் தேதி முதல் மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது
 இந்த விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் சீருடையணிந்து பள்ளிக்கு வருவதைக் காணமுடிந்தது. காலை 9.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கின.
 ஏற்கெனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்த தமிழக அரசின் இலவசப் பாடப் புத்தகங்கள் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளிக்கூடங்கள் திறந்தன.. மழலைகள் மகிழ்ந்தன..


                              அனைத்து பள்ளிகளும் 1.6.12 திறக்கப்பட்டன. பள்ளிக்கூடம் திறந்த உடன் மழலைகள், மாணவர்கள், மாணவிகள் கொண்ட மகிழ்ச்சியினை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.
      ”வானில் சிறகடித்து பறக்கும்
      பறவைகளை காணும்
      நெஞ்சம் மகிழும்..
     பள்ளிக்கூடத்திற்கு
     துள்ளி செல்லும்
     மழலை செல்வங்களை
காணும் கண்களில் பேரானந்தம்..
காலை நேரத்தில்
சாலைகளில் மாணாக்கர்கள்
மகிழ்ச்சி வெள்ளத்தில்
வரவேற்றன…பள்ளிக்கூட வாயில்கள்..
விடுமுறையில்
கடற்கரை மாலை நேர மணலில்
வீடு கட்டி ஆசை
ஆனந்த உறக்கத்தினை
அடைந்தவர்கள்..
இப்போதும் அதே மகிழ்ச்சி
தன்
நண்பர்களை, நண்பிகளை
காணும் போது கைக்குலுக்கி
நலம் விசாரிக்கும் போது..”
பள்ளிக்கூட பருவம் சிறார்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய நல்லதொரு இன்பம்..
அதனை அவர்கள் உணர்ந்தார்கள்..உணர்வார்கள்.. வாழ்க்கையில் உயர்வார்கள்…

வியாழன், 31 மே, 2012

our directors instructions to hms


பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நமது இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதல்கள் 

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XMG5FaTc5N1UycXM

greetings for successful academic year 2012-13


அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் 
www.asiriyarkural.blogspot.in  இந்த கல்வி ஆண்டு 2012-13
 எந்த வித பிரச்சனைகளுமின்றி 
வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள் .