புதன், 1 மே, 2013

இவர்கள் புத்தகங்களால் உருவானவர்கள்




இவர்கள் புத்தகங்களால் உருவானவர்கள்


                            முறைப்படி கல்வி கற்கவில்லை என்றபோதும் படித்தவர்கள் மற்றும்
கலைஞர்கள்மீது அக்பருக்கு நல்ல மரியாதை இருந்தது. அவர்களுக்கு
 உரிய மதிப்பளித்துத் தன்னுடைய அவையில் அமர்த்திக்கொண்டார்.
அவர்களுடைய திறமைகளைச் சரி யான முறையில் பயன்படுத்திக்கொண்டார்.
அக்பரிடம் ஒரு மிகப் பெரிய நூலகம் இருந்தது. அதில் அவருக்கு ஆர்வம்
 உள்ள பல துறைகளைப்பற்றிய புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டிருந்தன.
 தினந்தோறும் அக்பருக்கு இந்தப் புத்தகங்களைப் படித்துக்காட்டுவதற்காகவே பலர்
வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். மதம், தத்துவம்சார்ந்த பல புத்தகங்களை
 மொழிபெயர்க்கச் செய்தார் அக்பர். அவற்றுக்குப் பொருத்தமான அழகிய ஓவியங்களைச்
சேகரித்துத் தொகுத்தார். வாசிப்புதவிர, அவருக்குச் சிற்பம், ஓவியம், நடனம்
போன்ற நுணகலைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அக்பர்நாமாவில் உள்ள நுட்பமான
 ஓவியங்களும் அதில் பதிவாகியுள்ள விரிவான வாழ்க்கை முறையும் ஓர் உதாரணம்.
 ராஜாங்க விவகாரங்கள், நாட்டைப் பிடிக்கிற,
 பாதுகாக்கிற அலைச்சல் போன்றவற்றுக்கு நடுவே இதுமாதிரி விஷயங்கள்தாம் அவருக்கு
 மிகுந்த நிறைவைத் தந்திருக்கவேண்டும்.
பத்து வயதுகூட நிறையாத நெப்போலியனை, அவருடைய பெற்றோர் ஒரு ராணுவப்
பள்ளியில் சேர்த்தார்கள். புதிய சூழலில், புரியாத பாஷையில், சிக்கலான
 பல விஷயங்களை அவர் சிரமப்பட்டுக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. அவருடைய
 உச்சரிப்பு, குடும்பப் பின்னணி, ஏழைமை காரணமாக மற்றவர்கள் தொடர்ந்து கிண்டல்
 அடித்ததால் நெப்போலியன் அவர்களுடன் சேராமல் ஒதுங்கிக்கொண்டார். அப்போதுதான்,
புத்தகங்கள் அவருக்கு அறிமுகமாயின. குறிப்பாக, கணிதம், வரலாறு, அரசியல், ராணுவம்
 ஆகியவற்றில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது.

உலக வரலாறைப் படிக்கப் படிக்க, நெப்போலியனின் மனம் விரிவடையத் தொடங்கியது.
 பல்வேறு நாடுகள், அவற்றின் சமூக, கலாசாரப் பின்னணி, அவர்கள் எப்போது யாரிடம்
அடிமைப்பட்டார்கள், அதிலிருந்து எப்படி விடுபட்டார்கள் என்றெல்லாம் ஆவலோடு
 படித்துத் தெரிந்துகொண்டார். உலக வரைபடத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு, எந்த நாடு
எங்கே இருக்கிறது, அதற்குக் கடல்வழியே, தரைவழியே எப்படிச் செல்வது,
ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்டவை என்றெல்லாம்
 நுணுக்கமாக ஆராய்ந்தார். பத்து வயதில் கற்றுக்கொண்ட இந்த வாசிப்புப் பழக்கத்தை
நெப்போலியன் எப்போதும் விடவில்லை. பின்னர் போர்க்களங்களுக்குச்
செல்லும்போதுகூட, அவருடைய தாற்காலிகத் தங்குமிடங்களில் சில பெட்டிகளில்
 புத்தகங்கள் இருக்கும். பின்னாள்களில் தான் பங்குபெற்ற பல போர்களில், நெப்போலியன்
அறிமுகப்படுத்திய புதுப்புது உத்திகள் அனைத்தும், புத்தகங்களில் படித்துத்
தெரிந்துகொண்டவைதான்.
0
அமெரிக்க முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் வாசிக்கும் வேகம் பலரையும்
வியக்கவைக்கும். அதே சமயம் அவர் நுனிப்புல் மேய்வதும் கிடையாது. அவர்
 வெள்ளை மாளிகையில் வசித்தபோது, தினமும் காலைச் சாப்பாட்டுக்கு இறங்கி வருவதற்கு
 முன்பாகவே ஒரு புதிய புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவாராம். பல நாள்கள் காலை
 ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என தினசரி மூன்று புத்தகங்களைக்கூடப்
 படித்துக்கொண்டிருந்தாராம்.அதே அமெரிக்காவில் இன்னோர் இளைஞர்,
புத்தகங்களைப் பெரிதும் நேசித்தார். ஆனால், அவற்றை வாங்கிப் படிக்கும் அளவு
அவருக்கு வசதி போதவில்லை, ஆகவே, கடன் வாங்கிப் படித்தார். அதற்காகப்
 பல மைல்கள் நடந்தே சென்று படித்துவிட்டுத் திரும்பவும் அவர் தயங்கவில்லை.‘
 இந்தப் புத்தகங்கள்தான் என் உலகம், இவைகள்தான் என் எதிர்காலம்.’ அவர்
சொன்னது அப்படியே நடந்தது. அப்போது அவர் தேடித்தேடி வாசித்த
புத்தகங்கள்தான், பின்னர் அவரது எதிர்காலத்தைத் தீர்மானித்தன. அவர், ஆப்ரஹாம் லிங்கன்.
ஓஷோ தன்னை பாதித்த பத்து புத்தகங்களின் பட்டியலை ஒருமுறை அளித்தார்.
1. Thus Spake Zarathustra
2. The Brothers Karamazov
3. The Book Of Mirdad
4. Jonathan Livingston Seagull
5. Tao Te Ching
6. The Parables Of Chuang Tzu
7. Sermon On The Mount
8. Bhagavadgita
9. Gitanjali
10. The One Thousand Songs Of Milarepa
போப் ஆண்டவரின் வாடிகன் நகரத்தில் உள்ள நூலகம் அறுநூறு ஆண்டுகளுக்கும்
 மேற்பட்ட சரித்திரத்தைக் கொண்டது. இங்குள்ள அபூர்வமான நூல்கள்,
 குறிப்பேடுகள், ஆவணங்களின் எண்ணிக்கை, எழுபத்தைந்தாயிரத்துக்கும்மேல்.
இதுபோன்ற அரிய புத்தகங்கள் எங்கோ அடைபட்டு கிடப்பதால் யாருக்கும் பலனில்லை
 என்று முடிவுசெய்த ஸ்டீஃபன் ப்ளூம்பெர்க், அமெரிக்கா முழு வதும் வெவ்வேறு
 மாநிலங்களில், பல்வேறு நூலகங்களைத் தேடிச் சென்றார். அங்கிருந்த
அபூர்வமான புத்தகங்களையெல்லாம் கடத்திவர ஆரம்பித்தார். இருநூற்றைம்பதுக்கும்
 மேற்பட்ட நூலகங்களில், இருபத்து நான்காயிரம் புத்தகங்களுக்குமேல் திருடியிருக்கிறார் இவர்
. இவற்றின் மொத்த மதிப்பு, இருபது மில்லியன் டாலர்களைத் தாண்டக்கூடும். ஆனால்
இந்தப் புத்தகங்களை அவர் விற்கவில்லை.
0
இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்க ராணுவ அதிகாரிகள், வீரர்கள் தங்குவதற்கு
 ஓர் இடம் தேவைப்பட்டது. பக்கத்தில் எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின் வீடு
 ஒன்று இருப்பதாகத் தெரிந்துகொண்டு அங்கே சென்றார்கள். உதவி கேட்டார்கள்.
 தன்னுடைய பிரத்தியேக நூலகத்தில் அவர்கள் தங்குவதற்கு அவர் அனுமதி
அளித்தார். அடுத்த பல மாதங்கள், அந்த வீடும் நூலகமும் ஒரு சிறு ராணுவத்
தளமாக மாறிவிட்டது. போர் முடிவடைந்தபிறகு அகதா கிறிஸ்டியின்
 நூலகச் சுவர் முழுக்க அதிகாரிகளின் கைவண்ணம் பதிவாகியிருந்தது.
 மன்னிக்கவும், சுத்தப்படுத்தி கொடுத்துவிடுகிறோம் என்று அவர்கள் சொன்னபோது
அகதா கிறிஸ்டி மறுத்துவிட்டார். இது ஒரு சரித்திரப் பதிவு, அப்படியே இருக்கட்டும்
என்று சொல்லிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக